செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் புறப்பட்டார் மோடி- பயணத்திட்ட விவரம்

Published On 2019-06-13 04:44 GMT   |   Update On 2019-06-13 04:44 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று புறப்பட்டுச் சென்றார். மாநாட்டின் இடையே அவர் ரஷியா மற்றும் சீன அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
புதுடெல்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.



மாநாட்டின் இடையே அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து இன்று புறப்பட்ட பிரதமர் மோடி ஓமன், ஈரான் வழியாக இன்று பிற்பகல் 3 மணியளவில் பிஷ்கேக் விமான நிலையம் சென்றடைகிறார். 4.50 மணியளவில் சீன அதிபர் ஜின்பிங்கையும், 5.30 மணியளவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும், 6.30 மணியளவில் கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் இறுதியாக இரவு 10 மணியளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.

இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக வரலாறு, கலாசார உறவு இருந்து வருவதும், இந்திய கலாசாரத்தை அந்த நாட்டு மக்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News