செய்திகள்

இரட்டை இலைக்கு லஞ்சம் - தினகரன் மீதான விசாரணைக்கு தடை நீடிப்பு

Published On 2019-03-08 08:33 GMT   |   Update On 2019-03-08 08:33 GMT
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக டிடிவி தினகரன் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை டெல்லி ஐகோர்ட்டு நீட்டித்துள்ளது. #Twoleafsymbol #TTVDhinakaran
புதுடெல்லி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் அ.தி.மு.க. இரண்டாக பிரிந்திருந்தபோது இரட்டை இலை சின்னத்தை கேட்டு இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர்.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

அந்த சமயத்தில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு விசாரணைக்கு ஜனவரி 29-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது என்று உத்தரவு நகலை தாக்கல் செய்தார். இதையடுத்து பிப்ரவரி 26-ந் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையின் மீதான தடையை நீடிக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் விசாரணை தடையை வருகிற மார்ச் 20-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. #Twoleafsymbol #TTVDhinakaran
Tags:    

Similar News