உள்ளூர் செய்திகள்

திருச்சியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழா

Published On 2022-06-30 09:50 GMT   |   Update On 2022-06-30 09:50 GMT
  • திருச்சி மாவட்டம், காட்டூர் மான்போர்ட் பள்ளியில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்தார்
  • தமிழக முதலமைச்சரின் நான் முதல்வன் கனவு திட்டம் பிளஸ்-2 மாணவர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் துறையை தீர்மானிக்கும் இடத்திற்கு நீங்கள் இப்போது வந்திருக்கிறீர்கள் என பேச்சு

திருச்சி:

தமிழக முதலமைச்சர் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், திருச்சி மாவட்டம், காட்டூர் மான்போர்ட் பள்ளியில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

கலெக்டர் மா.பிரதீப் குமார் மாணவர்களுக்கான குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வழிகாட்டுதல் கையேட்டினை மாணவர்களுக்கு வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக முதலமைச்சரின் நான் முதல்வன் கனவு திட்டம் பிளஸ்-2 மாணவர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உங்கள் துறையை தீர்மானிக்கும் இடத்திற்கு நீங்கள் இப்போது வந்திருக்கிறீர்கள்.

இங்கு பல்வேறுதுறை சார்ந்த ஆசிரியர்கள் கல்வியாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஏணி படிகளாக மட்டுமே இருப்பார்கள். அதில் ஏற வேண்டியது நீங்கள்தான் என்பதை தெரிந்துகொண்டு துறையை தேர்வு செய்யுங்கள்.

ஆர்வம் இருக்கும் துறையை தேர்வு செய்யாமல் உங்களுக்கு வேட்கை இருக்கும் துறையை தேர்வு செய்யுங்கள். நானும் அரசு பள்ளியில் படித்து தான் இன்றைக்கு கலெக்டராக உயர்ந்து இருக்கிறேன். கல்விக்கு முற்றுப்புள்ளி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்

இந்நிகழ்வில் முதன்மைக் கல்லூரி அலுவலர் பாலமுரளி, வழிகாட்டுதல் வல்லுநர் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News