உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-07-03 05:04 GMT   |   Update On 2022-07-03 05:04 GMT
  • கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
  • சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இருந்தபோதும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது சாரல் மழை பெய்து இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. எனவே இதனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

குறிப்பாக கேரளமாநிலத்தில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, குணாகுகை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் அவர்கள் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News