திருப்பூரில் தேசிய ஆடை கண்காட்சி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது
- ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்து வகைகளும் அரங்குகளில் இடம்பெறும்.
- நிறுவனங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூரில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின்(ஏ.இ.பி.சி.,) அங்கமான இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் முதன் முறையாக வருகிற 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தேசிய ஆடைக் கண்காட்சி நடக்கிறது.
நவீன காலத்துக்கு ஏற்ற ஆடைகள், ஆண், பெண், குழந்தைகளுக்கான ஆடைகள் என அனைத்து வகைகளும் அரங்குகளில் இடம்பெறும். உள்நாடு மற்றும் ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர்களை இணைக்கும் வகையில் இது அமையும்.தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் இருந்தும் வர்த்தகர்கள் பங்கேற்பர். கண்காட்சியில் பங்கேற்கும் உறுப்பினர் அல்லாத நிறுவனங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதுவரை 60 பேர் அரங்குக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
மொத்தம் 90 அரங்குகள் இடம்பெறும் என நம்புகிறோம். கண்காட்சி திருப்பூர் பின்னலாடை துறைக்கு அவசியமானதாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஏற்றுமதி வர்த்தகம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். நடப்பு நிதியாண்டு முடிவில் திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் 36 ஆயிரம் கோடி, உள்நாட்டு வர்த்தகம், 20 ஆயிரம் கோடி ரூபாய் என 56 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.