பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை
- போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசுத்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் ஆலோசனை
- மங்கலம் ரோட்டில் வரும் வாகனங்களை, அம்மாபாளையம் பிரிவில் இருந்து திருப்பூர் ரோடு நகருக்குள் வருமாறு ஆலோசிக்கப்பட்டது
பல்லடம் :
பல்லடம் நகர பகுதியில்ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அரசுத்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ஜெயதேவ்ராஜ், பல்லடம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலா தேவி, மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் வரும் கனரக வாகனங்களை, பனப்பாளையம் வழியாக தாராபுரம் ரோடு சென்று அங்கிருந்து பொள்ளாச்சி ரோடு வழியாக காரணம்பேட்டையை அடைந்து அங்கிருந்து கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் செல்லவும், மங்கலம் ரோட்டில் வரும் வாகனங்களை, அம்மாபாளையம் பிரிவில் இருந்து திருப்பூர் ரோடு நகருக்குள் வருமாறும் போக்குவரத்தை மாற்றியமைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உத்தரவு வந்த பின்னர் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது என முடிவு செய்யப்பட்டது.