உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம்.

திருப்பத்தூரில் நாளை புதிய கலெக்டர் அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Published On 2022-06-28 09:56 GMT   |   Update On 2022-06-28 09:57 GMT
  • ரூ.110 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
  • 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து திருப்பத்தூர்-வாணியம்பாடி சாலையில் டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் அருகே உள்ள மொஹிப் ஷூ கம்பெனியில் உள்ள விடுதியில் இரவு தங்குகிறார்.

கலெக்டர் அலுவலகம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் கலந்து கொள்ளவதறகாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆம்பூரில் இருந்து புறப்பட்டு வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக காலை 9.15 மணிக்கு திருப்பத்தூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருகிறார்.

அங்கு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார். பின்னர் அவர் கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறார், தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தை பார்வையிட்டடும். புதிய கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்று நட்டு வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு வருவாய் துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, தோட்டலை துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, சுகாதாரத்துறை, நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம், மாவட்ட முன்னோடி வங்கி, தாட்கோ, மின்சாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி, பேரூராட்சிகள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டம் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க ஆம்பூர் முதல் திருப்பத்தூர் வரை கட்சி கொடிகள் கட்டப்பட்டு, ஆங்காங்க வரவேற்பு மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News