உள்ளூர் செய்திகள்
பழனி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள சண்முகா நதி பாலம்
- பழனி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள சண்முகா நதி பாலத்தால் பொதுமக்கள் அச்சம்
- இந்த பாலம் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
பழனி:
பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சண்முகா நதி ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 32 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் பாலத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்புகள் சேதமடைந்து தொட்டாலே இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினசரி அதிக அளவு வாகனங்கள் சென்று வருகின்றன. பெரும் விபத்து நடப்பதற்கு முன்பாக இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக பாலத்தின் பக்க வாட்டில் இருந்த கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளன. மாலை நேரங்களில் இப்பகுதியில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.