உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்சிற்கு அமைச்சரின் வாகனம் வழிவிடவில்லை என்ற தகவல் தவறானது-கலெக்டர் விளக்கம்

Published On 2022-08-10 10:43 GMT   |   Update On 2022-08-10 10:43 GMT
  • கொள்ளிடம் ஆற்றின் வலது கரையோரம் ஆய்வு செய்துவிட்டு அணைக்கரை பாலத்திற்குள் அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களும், மாவட்ட கலெக்டரின் வாகனமும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தீயணைப்புதுறை என அனைத்து துறை வாகனங்களும் நுழைந்தது.
  • அவசர ஊர்திக்கு வழி விடுவதுதான் அப்போதைய சிறந்த முடிவாக இருந்தது. அதன்படியே பாதுகாப்பு வாகனத்தின் பாதுகாவலர்கள் வழிகாட்டுதலுடன் அனைத்து துறை வாகனங்களும் அதே வழியாக வேகமாக சென்றுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழிவிடவில்லை என்னும் தலைப்பில் வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்நேரத்தில் இந்த அறிக்கையின் மூலம் உண்மை நிலையை கீழ்க்கண்டவாறு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினையும், மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

கடந்த 5-ம் தேதி மட்டும் கல்லணை முதல் அணைக்கரை மதகுசாலை வரை கொள்ளிடம் ஆற்றின் கரையில் பயணம், 81 கி.மீ தூரத்தினை காலை முதல் மாலை வரை சுமார் 12 மணி நேரம் பயணம் செய்து மக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர் தஞ்சாவூர் மாவட்டம். அணைக்கரை (கீழணை)- ஆய்வு மாளிகையில் அரசு அலுவலர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்ததினால் அணைக்கரை பாலம் வழியாக ஆய்வு மாளிகைக்கு சென்றார்.

அணைக்கரை பாலத்தின் பாலம் என்பது ஒரு வழியாக மட்டுமே செல்லக்கூடிய பாலம். ஒரு வழியாக வாகனங்கள் வந்தால் மறுபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும். மறுபுறத்தில் வாகனங்களை அனுமதிக்கும் போது, அந்தப் பக்கத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும். இதுதான் அன்றும் நடந்தது.

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையோரம் ஆய்வு செய்துவிட்டு அணைக்கரை பாலத்திற்குள் அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களும், மாவட்ட கலெக்டரின் வாகனமும் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தீயணைப்புதுறை என அனைத்து துறை வாகனங்களும் நுழைந்தது.

கிட்டத்தட்ட 1 கி.மீ தூரம் கொண்ட பாலத்தின் மைய பகுதியில் துறை அலுவலர்களின் வாகனங்கள் செல்லும் போதுதான் மறுபுறம் அவசர ஊர்தி வந்துள்ளது. அந்நேரத்தில் வாகனங்கள் பின்னோக்கி செல்வதை விட முன்னோக்கி வேகமாக சென்று அவசர ஊர்திக்கு வழி விடுவதுதான் அப்போதைய சிறந்த முடிவாக இருந்தது. அதன்படியே பாதுகாப்பு வாகனத்தின் பாதுகாவலர்கள் வழிகாட்டு தலுடன் அனைத்து துறை வாகனங்களும் அதே வழியாக வேகமாக சென்றுள்ளது. பாதுகாப்பு அலுவலர்களின் துரிதமான முடிவினால் அவசர ஊர்திக்கான வழி விரைவில் கிடைத்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News