நாமக்கல்லில் தொடர் பணியால் அரசு பஸ்சை பாதியில் நிறுத்தி சென்ற டிரைவர்
- குளறுபடியால் ஒரு மணி நேரம் தாமதமாக பஸ் புறப்பட்டது.
- டிரைவருக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை.
நாமக்கல்:
நாமக்கல்லில் இருந்து வேலம்பட்டிக்கு 10 சி அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் பஸ் ஸ்டாண்டில் புறப்பட தயாராக இருந்தது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், கண்டக்டருடன் பேசிக்கொண்டிருந்த டிரைவர் மணிவண்ணன், 4 நாட்களாக தொடர்ந்து இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. அதனால் பஸ்சை இயக்க மாட்டேன் என்று கூறிவிட்டு இறங்கி சென்று விட்டார்.
இதனால் கண்டக்டர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, மாற்று டிரைவரை அனுப்பி பஸ் இயக்கப்பட்டது. இந்த குளறுபடியால் ஒரு மணி நேரம் தாமதமாக பஸ் புறப்பட்டது. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளானார்கள்.
இது குறித்து நாமக்கல் போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் கூறுகையில், இன்று முகூர்த்த நாள் என்பதால் பலர் விடுமுறையில் சென்றுவிட்டனர். அதனால் டிரைவருக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. மாற்று டிரைவர் ஏற்பாடு செய்து பஸ் இயக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.