உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க.வில் சேர முடிவு?- சசிகலா குடும்பத்தினரிடமும் ரகசிய பேச்சு

Published On 2022-06-25 06:35 GMT   |   Update On 2022-06-25 06:35 GMT
  • எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
  • 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருப்பதன் பின்னணியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அ.தி.மு.க.வில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் பக்கமே இருப்பதால் அவரே அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

இதனால் ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக டெல்லியில் பிரதமர் மோடியை சந்திப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பிரதமரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படவில்லை.

அ.தி.மு.க.வில் உள்கட்சி பிரச்சினை தீவிரமாக இருக்கும் இந்த சூழலில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதற்கு பிரதமர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் அவரை ஆதரித்து பேசினார்.

சசிகலாவும் இதனை ஆமோதித்து இருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கு சசிகலாவுடன் கைகோர்க்கவும் ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சசிகலா குடும்பத்தினர் சிலருடன் அவர் ரகசியமாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பியதும் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தனது எதிர்காலம் குறித்தும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவது பற்றியும் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் முற்றியுள்ளதை தொடர்ந்து அ.தி.மு.க. மீண்டும் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

இதனால் அடுத்தடுத்த நாட்களில் அ.தி.மு.க.வில் மேலும் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் இந்த உள்கட்சி மோதலை பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் நிலவும் தற்போதைய பிரச்சினை விரைவில் முடிவுக்கு வந்து அந்த கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதையே பா.ஜனதா விரும்புகிறது. இதுவே தற்போதைய சூழலில் தமிழகத்தில் பா.ஜனதா கால் பதிக்க உதவும் என்றே அக்கட்சியினர் நம்புகின்றனர்.

இதனை மனதில் வைத்து அந்த கட்சி ரகசியமாக சில நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News