பிளவுகளை கடந்து அ.தி.மு.க. நிச்சயம் ஒன்றிணையும்- சசிகலா
- அ.தி.மு.க.வுக்கு சுயேட்சை சின்னமாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.
- மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரட்டை இலை சின்னம் தான், அ.தி.மு.க.வின் நிரந்தர மற்றும் வெற்றி சின்னமாக அமைந்து விட்டது.
அவனியாபுரம்:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சம்பட்டியில் பிறந்தவர் மாயத்தேவர் (வயது88). அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.யான இவர் உடல்நலம் குறைவு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சசிகலா சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு கட்சி தொடங்கிய போது நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு சுயேட்சை சின்னமாக வழங்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர். உடல்நல குறைவு காரணமாக காலமான அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளேன்.
மாயத்தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரட்டை இலை சின்னம் தான், அ.தி.மு.க.வின் நிரந்தர மற்றும் வெற்றி சின்னமாக அமைந்து விட்டது. பிளவுகளை கடந்து அ.தி.மு.க. நிச்சயம் ஒன்றிணையும். அம்மா ஆட்சி விரைவில் அமையும்.
இவ்வாறு சசிகலா கூறினார்.