உள்ளூர் செய்திகள்

மின்சார ரெயிலில் இருந்து விழுந்த கொள்ளையனின் கால் துண்டானது

Published On 2022-10-06 11:08 GMT   |   Update On 2022-10-06 11:08 GMT
  • கொள்ளையன் நவீன் மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போனை பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான்.
  • கொள்ளையன் மீது கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் 6 வழக்குகள் உள்ளன.

ராயபுரம்:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. வழக்கமாக பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி- கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரெயில் மற்றும் விரைவு ரெயில்கள் செல்லும் போது வேகம் குறைவாக இருக்கும்.

இந்த நிலையில் அந்த இடத்தில் மின்சாரரெயில் சென்று கொண்டு இருந்த போது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவன் திடீரென மின்சார ரெயிலில் தாவி ஏறினான். பின்னர் அவன், ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த பயணிகளின் செல்போனை பறிக்க முயன்றான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதற்கிடையே தொங்கியபடி வந்த வாலிபர் நிலைதடுமாறி மின்சார ரெயிலுக்குள் விழுந்தான்.

இதில் அவனது 2 கால்களும் சிக்கிக்கொண்டன. அவரது இடது கால் முழுவதும் நசுங்கி துண்டானது. வலது கால் முற்றிலும் நசுங்கி பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கால் துண்டான வாலிபரிடம் விசாரித்த போது அவன், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கொள்ளையன் அட்டை நவீன்(24) என்பது தெரிந்தது.

ஓடும் மின்சார ரெயிலில் தாவி ஏறி ஜன்னல் ஓர பயணிகளிடம் செல்போனை பறிக்க முயன்ற போது தவறி விழுந்து இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து நவீனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கால் துண்டான நவீனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளையன் நவீன் மின்சார ரெயிலில் பயணிகளிடம் செல்போனை பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். அவன் மீது கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் 6 வழக்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு அட்டை நவீனின் கூட்டாளியான குடுவை சுரேஷ் என்பவனுக்கும் ஓடும் ரெயிலில் அடிபட்டு கால் துண்டானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News