உள்ளூர் செய்திகள்

கனரா வங்கி ஏ.டி.எம். திறந்து இருந்த காட்சி.


ஊழியர்கள் அலட்சியத்தால் தானாக திறந்து கொண்ட ஏ.டி.எம். எந்திரம்

Published On 2022-06-25 10:28 GMT   |   Update On 2022-06-25 10:28 GMT
  • இரண்டு வாலிபர்கள் பணம் எடுப்பதற்காக இன்று காலை வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றுள்ளனர்.
  • அப்போது திடீரென அபாய மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

திருச்சி:

திருச்சி கண்டோன்மெண்ட் சேவா சங்கம் பள்ளி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகில் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை இரண்டு வாலிபர்கள் பணம் எடுப்பதற்காக இந்த வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென அபாய மணி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் ஏ.டி.எம். அருகே பூக்கடை நடத்தி வரும் பெண் ஒருவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் வைக்கப்பட்டிருக்கும் கதவு திறக்கப்பட்ட நிலையில் இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்கள்.

அதில் அபாய ஒலி ஒலிப்பதற்கு முன்னதாக அந்த வாலிபர்கள் உள்ளே வந்து பார்ப்பது போன்றும், அதற்கு சிறிய நேரத்திற்கு முன்னதாக ஏ.டி.எம். எந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்புவது போன்றும், பின்னர் சரியாக ஏ.டி.எம். எந்திரத்தை மூடாமல் சென்றது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

மேலும் விசாரணையில் அந்த வாலிபர்கள் பணம் எடுக்க வந்ததும் ஏ.டி.எம். எந்திரம் திறந்து கிடந்ததை பார்த்ததும் அபாய மணி ஒலித்ததால் பயந்துபோய் ஓடியதும் மேலும் இந்த சம்பவம் ஏ.டி.எம்.மில் பணம் நிரப்பிய வங்கி ஊழியர்களின் அலட்சியப் போக்கால் நடைபெற்றது என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News