புளியங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் மீது போக்சோ வழக்கு
- வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் ரீதியில் முதியவர் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
- இதுகுறித்து அந்த சிறுமி கடந்த 21-ந்தேதி குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொலைபேசி எண்ணான 1098-க்கு அவர் போன் செய்துள்ளார்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 18-ந்தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அந்த வீட்டுக்குள் புளியங்குடி பிச்சாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த முத்தையா(வயது 55) என்பவர் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த சிறுமியை பாலியல் ரீதியில் அவர் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமி கடந்த 21-ந்தேதி குழந்தைகளுக்கான பாதுகாப்பு தொலைபேசி எண்ணான 1098-க்கு அவர் போன் செய்துள்ளார்.
அப்போது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்தும், தொந்தரவு கொடுத்த முதியவர் குறித்தும் சிறுமி தைரியமாக தெரிவித்துள்ளார். உடனடியாக தென்காசி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அருண் பிரசாத் தலைமையிலான குழுவினர் புளியங்குடி பகுதிக்கு விரைந்து வந்து சிறுமியிடம் நேரடியாக விசாரித்தனர். அதில் சிறுமிக்கு, முத்தையா பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது புளியங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், முத்தையா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.