உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இருந்து இயக்கப்படும் தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்கள் மூலம் 2½ மாதத்தில் ரூ.2 கோடி வருவாய்

Published On 2022-08-10 10:20 GMT   |   Update On 2022-08-10 10:20 GMT
  • வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளிடையே வரவேற்பு இருந்தது.
  • இரு சிறப்பு ரெயில்களையும் நீட்டித்து இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.

தென்காசி:

நெல்லையில் இருந்து கடந்த ஏப்ரல் 17-ந் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை நெல்லை- தாம்பரம் ஞாயிற்றுக்கிழமை தோறும், தாம்பரம்-நெல்லை திங்கள்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.

இதேபோல ஏப்ரல் 21-ந் தேதி முதல் ஜூன் 27-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும் நெல்லை-மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம்- நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த ரெயில்கள் அம்பா சமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக கோடைகால சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளிடையே வரவேற்பு இருந்தது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான வருமானம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை குறித்து சமூக ஆர்வலரும், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு தென்னக ரெயில்வே அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

நெல்லை-தாம்பரம் ரெயில் 9313 பயணிகளுடன் 65.77 லட்சம் வருமானமும், தாம்பரம்-நெல்லை ரெயில் 8940 பயணிகளுடன் 55.14 லட்சம் வருமானமும், நெல்லை- மேட்டுப்பாளையம் ரெயில் 7814 பயணிகளுடன் 38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயில் 8380 பயணிகளுடன் 42.14 லட்சம் வருமானமும் தந்துள்ளது.

2½ மாதங்களில் இரு மார்க்கங்களிலும் 10 சேவைகள் இயக்கப்பட்ட இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களையும் சேர்த்து மொத்தம் 34,447 பயணிகளுடன் ரூ.2.01 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வருமானம் தரும் இந்த அம்பை, தென்காசி, ராஜபாளையம் வழித்தடத்தின் வழியாக சென்னை மற்றும் கோவை மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் இந்த இரு வாராந்திர சிறப்பு ரெயில்களையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், இந்த சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது. எனவே நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை, திண்டுக்கல் வழியாக தாம்பரத்திற்கும், தென்காசி மதுரை, திண்டுக்கல், பழநி வழியாக மேட்டுப்பாளையத்துக்கும் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களை நிரந்தரமாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் இயக்கம் வரும் 18-ந்தேதியும், நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கம் செப்டம்பர் 4-ந் தேதியும் முடிவடைய இருப்பதால் உடனடியாக தென்னக ரெயில்வே இந்த நெல்லை, தென்காசி ரெயில் வழித்தடத்தின் வழியாக இயக்கப்படும் இந்த இரு சிறப்பு ரெயில்களையும் நீட்டித்து இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News