உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் 30-ந் தேதி விசாரணை

Published On 2022-09-27 08:25 GMT   |   Update On 2022-09-27 08:25 GMT
  • மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு வரும் 30-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
  • முன்னதாக வழக்கில் எடப்பாடி பழனிசாமி, கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்' என்று ஆகஸ்ட் 17-ந்தேதி தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், செப்டம்பர் 5-ந்தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அதேபோல ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்களில், ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு வரும் 30-ந்தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News