உள்ளூர் செய்திகள்

வடபழனியில் நள்ளிரவில் லாரி மோதி பெண் பலி- டிரைவர் கைது

Published On 2022-09-29 06:18 GMT   |   Update On 2022-09-29 06:18 GMT
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.
  • தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போரூர்:

வடபழனியில் இருந்து கோயம்பேடு நோக்கி நள்ளிரவு 2 மணி அளவில் கான்கீரிட் கலவை லாரி ஒன்று சென்றது.

100அடி சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (26) பி.இ. பட்டதாரி. இவர் பொன்னேரி அண்ணாசிலையில் இருந்து தேரடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஆஞ்சநேயர் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென கதவு திறந்தபோது நிலை தடுமாறிய ரகுபதி மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார்.

அந்த நேரத்தில் எதிரே வந்த லாரி மோதியதில் ரகுபதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு வருகிற ஜனவரி மாதம் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News