கன்னியாகுமரியில் இன்று சூறாவளி காற்றால் பயங்கர கடல் சீற்றம்- சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை
- கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இன்று காலை11மணிமுதல்"திடீர்"என்று பயங்கர சூறாவளி காற்றுவீசியது. இதனால் கடல் பயங்கர சீற்றமாக காணப்பட்டது.
சுமார் 10அடி முதல் 15அடிஉயரத்துக்கு கடல் அலை எழுந்தது. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த இந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சுற்றுலா போலீசார் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிக்கதடைவிதித்தனர்.
கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தை போல கோவளம், சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம், சொத்தவிளை, வட்டக்கோட்டை பீச், ராஜகமங்கலம் துறை போன்ற இடங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறைந்த அளவு வள்ளம் மற்றும் கட்டுமரங்களில்மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டுஅவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.
இதனால் மீன் சந்தைகளில் மீன் வரத்து குறைவாக காணப்பட்டது. அதேசமயம் மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருந்தது.