உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்திடம் 80 பேர் கூட இல்லை- ஜெயக்குமார் பேச்சு

Published On 2022-08-16 07:37 GMT   |   Update On 2022-08-16 07:37 GMT
  • எல்லா துறையிலும் தோற்றுப்போன அரசு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது.
  • தொழிலாளர்கள் நினைத்தால் ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவார்கள்.

சென்னை:

அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தமிழக அரசையும், தமிழக போக்குவரத்து துறையையும் கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய உயர்வு வழங்குவதற்கான பேச்சுவார்த்தையை முடிக்காததை கண்டித்தும், ஊழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

உண்ணாவிரதத்தை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்றி வைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களாக உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த ஆட்சியின் அவல நிலையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

இந்த ஆட்சியில் எல்லா தொழிலாளர்களுமே நலிவடைந்து போய் இருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. முதல்-அமைச்சருக்கு தினமும் 'போட்டோ ஷூட்' மட்டும் தான் முக்கியம். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தான் இந்த அரசு திறந்து வைக்கிறது.

நகைக்கடன் தள்ளுபடியில் அத்தனை பேருக்கும் தள்ளுபடி செய்யவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 தருவேன் என்றார்கள் கொடுக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். செய்தார்களா? அதன் சூட்சுமம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

எல்லா துறையிலும் தோற்றுப்போன இந்த அரசு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க கூடாது. தொழிலாளர்கள் நினைத்தால் இந்த ஆட்சிக்கே முடிவு கட்டி விடுவார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடம் 80 சதவீத அ.தி.மு.க.வினர் இல்லை. 80 பேர் மட்டுமே உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் முடிந்தால் 1000 பேரை திரட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும்.

அ.தி.மு.க.வில் சசிகலா, டி.டி.வி.தினகரனை எந்த நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் அளித்த தேனீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை.

இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.

உண்ணாவிரதத்தில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கோகுல இந்திரா, மாதவரம் மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், கே.பி.கந்தன், பாலகங்கா, சிட்லபாக்கம் ராஜேந்திரன், பென்ஜமின், வி.என்.ரவி, ராஜேஷ், வாலாஜாபாத் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. புரசை வி.எஸ்.பாபு, மாநில வர்த்தக அணி இணை செயலாளரும், சாத்தான் குளம் முன்னாள் சேர்மனு மான ஏ.எம்.ஆனந்தராஜா, பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வடக்கு பகுதி செயலாளர் நொளம்பூர் இம்மானுவேல், மாணவர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி, வடசென்னை மாவட்ட பொருளாளர் வக்கீல் எம்.பாலாஜி, ஆயிரம் விளக்கு 117-வது செயலாளர் பி.சின்னையன் என்ற ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News