உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் போலி திருமண தகவல் மையம் மூலம் பெண் என்ஜினியரிடம் ரூ.8 லட்சம் மோசடி

Published On 2022-06-28 06:30 GMT   |   Update On 2022-06-28 06:30 GMT
  • லண்டன் வாலிபர் அனுப்பிய பார்சலில் ரூ.2 கோடி நகை, வெளிநாட்டு கரன்சி இருக்கும் என நம்பிய கீதா, உடனடியாக அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பணத்தை அனுப்பினார்.
  • அடுத்த விநாடியில் அனைத்து செல்போன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனால் செல்போனில் பேசிய அந்த பெண் கூறியபடி எந்தவித நகையும் வரவில்லை. மேலும் வெளிநாட்டு கரன்சியும் கிடைக்கவில்லை.

திருச்சி:

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 25). பெயர் மாற்றப்பட்டுள்ளது. சாப்ட்வேர் என்ஜினீரான இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் திருமண வயதை எட்டிய அவர் தனது விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது புரொபைலில் பெங்களூர் முகவரியில் ஒரு இளைஞரை பார்த்தார். பின்னர் அந்த இளைஞரும் கீதாவும் ஒருவரையொருவர் சுய அறிமுகம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்து கொள்ளும் ஆசையுடன் இருந்தபோதிலும், அவரை பற்றி அறிந்து கொள்ள நட்புடன் தொடங்கிய கீதாவின் இந்த பழக்கம் நாளடையில் சாட்டிங் செய்யும் அளவுக்கு மாறியது. அப்போது அந்த வாலிபர் தனது சொந்த ஊர் பெங்களூர் என்றும், தற்போது லண்டனில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் தான் சம்பாதித்து வைத்திருக்கும் நகை மற்றும் வெளிநாட்டு கரன்சி ஆகியவை இந்திய மதிப்பில் ரூ.2 கோடி அளவுக்கு இருக்கிறது. அதனை பார்சலில் உனது பெயருக்கு அனுப்பி வைக்கிறேன். அதனை வாங்கி வைத்துக் கொள். இரண்டு மாதங்களில் தான் இந்தியா திரும்பி விடுவேன். பின்னர் நாம் இருவரும் திருமணம் செய்து தமிழ்நாட்டில் செட்டில் ஆகலாம் எனக் கூறியுள்ளார்.

இதனை கீதா முழுமையாக நம்பினார். அடுத்த ஒரு சில தினங்களில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஒரு பெண் கீதாவின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தார். லண்டனிலிருந்து தங்களது பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளது.

இதனை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி, சுங்கத்துறை அனுமதி ஆகியவை பெற வேண்டும். மேலும் அந்த பொருட்களுக்காக குறிப்பிட்ட வரியையும் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கரன்சியை மாற்ற வேண்டும் என ஒவ்வொன்றாக சொல்லி ரூ.8 லட்சம் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

லண்டன் வாலிபர் அனுப்பிய பார்சலில் ரூ.2 கோடி நகை, வெளிநாட்டு கரன்சி இருக்கும் என நம்பிய கீதா, உடனடியாக அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பணத்தை அனுப்பினார். அடுத்த விநாடியில் அனைத்து செல்போன் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. ஆனால் செல்போனில் பேசிய அந்த பெண் கூறியபடி எந்தவித நகையும் வரவில்லை. மேலும் வெளிநாட்டு கரன்சியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதா, உடனடியாக இதுகுறித்து திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் உடனடியாக விரைந்து விசாரணை மேற்கொண்டார். இதில் கீதா அனுப்பிய ரூ.8 லட்சம் பணம் கொல்கத்தாவில் உள்ள இந்தியன் வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்தது.

உடனே அங்குள்ள வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கணக்கை முடக்கினர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் மோசடி செய்த நபர் நைஜீரியாவை சேர்ந்த வாலிபர் என்பதும் தெரிய வந்தது. மேற்கு வங்காளத்தில் தங்கியிருந்து அந்த வாலிபர் திருச்சி பெண்ணை ஏமாற்றியுள்ளார்.

இது பற்றி சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் இந்த இளம்பெண் ஏமாந்துள்ளார். பணத்தை யாரும் பார்சலில் அனுப்புவதில்லை. எந்தப் பொருள் அனுப்பினாலும் அனுப்புபவர் வரி செலுத்த வேண்டும். ஆகவே போலி மோசடி பேர் வழிகளிடம் நம்பி பணத்தை யாரும் இழக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News