உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய கார், பள்ளி பஸ்சை படத்தில் காணலாம்.

திருமங்கலம் அருகே தனியார் பள்ளி பஸ் மீது கார் மோதல்- டிரைவர் உடல் நசுங்கி பலி

Published On 2022-09-27 06:35 GMT   |   Update On 2022-09-27 06:35 GMT
  • விபத்தில் பள்ளி பஸ்சில் பயணம் செய்த 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
  • காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

திருமங்கலம்:

விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளி பஸ் இன்று காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு கள்ளிக்குடியில் இருந்து விருதுநகருக்கு சென்று கொண்டிருந்தது.

மையிட்டான்பட்டி விலக்கு பகுதியில் பஸ் சென்றபோது சென்னையில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரை தாண்டி எதிரே வந்த பள்ளி பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் கார், பஸ்சுக்குள் சிக்கி முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதேபோல் பள்ளி பஸ்சின் முன்பகுதியும் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனசேகரன் (52) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் பள்ளி பஸ்சில் பயணம் செய்த 4 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி காரில் சிக்கியிருந்த தனசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் நான்கு வழிச்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News