போதை மாத்திரை கேட்டு மருந்து கடைக்காரர் மீது தாக்குதல்- 2 வாலிபர்கள் கைது
- வாலிபர்கள் மதுபோதையில் வந்து தங்களுக்கு போதை மாத்திரை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
- மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என கூறியுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் எஸ்.வி.காலனியில் மருந்து கடை நடத்தி வருபவர் பாலதண்டாயுதபாணி (வயது 54). இவர் சம்பவத்தன்று இரவு கடையில் இருந்த போது இரண்டு வாலிபர்கள் மதுபோதையில் வந்து தங்களுக்கு போதை மாத்திரை வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்க முடியாது என கூறியுள்ளார். அதன்பின்னர் கடையை மூடிவிட்டு பாலதண்டாயுதபாணி வீட்டுக்கு செல்ல முயன்ற போது அந்த வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். மருந்து கடைக்காரரே சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முத்து நகரை சேர்ந்த பிபின் (23), ராம்நகரை சேர்ந்த மனோஜ் குமார் (27), என்பதும் பனியன் நிறுவனத் தொழிலாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.