உள்ளூர் செய்திகள்

நிலம் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.3 லட்சம் மோசடி

Published On 2022-06-28 09:54 GMT   |   Update On 2022-06-28 09:54 GMT
  • ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது புகார்
  • வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார்

கோவை :

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 53). இவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (45). இவர் அங்குள்ள ஜி.கே.டி நகரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வந்தார். நான் நிலம் வாங்குவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு அவரை அணுகினேன். அப்போது அவர் அன்னூரில் நிலம் உள்ளது.

முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார். நான் நிலத்தை பார்வையிட்ட பின்னர் அவரிடம் 4 கட்டங்களாக ரூ.3 லட்சம் கொடுத்தேன். ஆனால் இதுவரை நிலத்தை கிரையம் செய்து கொடுக்கவில்லை. நான் பணத்தை திருப்பி கேட்டபோதும் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவில் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டை சேர்ந்தவர் பழனிவேல் (43). இவர் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-எனக்கு அறிமுகமான அசோக்குமார் (38) என்பவர் என்னை கடந்த 18-ந் தேதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் எனது தங்க நகைகளை அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டெடுப்பதற்கு ரூ.13.5 லட்சம் தேவைப்படுகிறது.

ரூ.10 லட்சம் என்னிடம் உள்ளது. மீதமுள்ள ரூ.3.5 லட்சத்தை எனது வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வையுங்கள். பின்னர் ரூ.3.5 லட்சத்திற்கு உண்டான நகையை உங்களிடம் கொடுத்து விடுகிறேன். வங்கி முன்பு காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

இதனை உண்மை என நம்பிய நான் அவரது வங்கி கணக்கிற்கு ரூ. 3.5 லட்சத்தை அனுப்பி விட்டு அவர் சொன்ன வங்கிக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. என்னிடம் பணம் வாங்கி மோசடி செய்து விட்டார். பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News