உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் முதல் முக்கிய கிராமங்கள் வழியாக அன்புமணி ராமதாஸ் பிரச்சார எழுச்சி நடை பயணம்

Published On 2022-08-18 10:27 GMT   |   Update On 2022-08-18 10:27 GMT
  • தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் இந்த மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.
  • தருமபுரி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான காவிரி உபரிநீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

தொப்பூர்,

தருமபுரி பா.ம.க. மேற்கு மாவட்ட செயலாளரும், தருமபுரி எம்.எல்.ஏ.வுமான வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாகத் தான் தமிழ்நாட்டில் நுழைகிறது. தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி ஆறும், வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் இந்த மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.

நிலத்தடி நீரில் புளோரைடு கலந்திருப்பதால் புளுரோசிஸ் குறை பாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். பாசனத் தேவைக்கு தண்ணீர் இல்லாததால் தருமபுரி மாவட்டம் இன்னும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளதால் விவசாயம் செழிக்கவில்லை. இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்துவது தான்.

தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க தலைவரும், முன்னாள் நடுவண் சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி., 19,20,21.8.2022 (வெள்ளி,சனி,ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள், தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் முதல் முக்கிய கிராமங்கள் வழியாக பிரச்சார எழுச்சி நடை பயணம் மேற்கொள்கிறார்.

ஒகேனக்கல், மடம், பென்னாகரம், நல்லாம்பட்டி, பி.அக்ரகாரம், நாகதாசம்பட்டி, சோமேனஅள்ளி, இண்டூர், அதகப்பாடி, குரும்பட்டி டீகடை, சோலைக்கொட்டாய், நடுப்பட்டி, ஒடசல்பட்டி கூட்டுரோடு, கடத்தூர், சில்லாரஅள்ளி, நத்தமேடு பேருந்து நிறுத்தம், ஜாலியூர், நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, தருமபுரி நான்கு ரோடு, கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி கூட்டுரோடு, கோபால புரம், மெணசி, பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி ஆகிய இடங்களில் இத்திட்டம் குறித்து பொதுமக்களிடையே பேசுகிறார்.

தருமபுரி மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான காவிரி உபரிநீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்புமணி ராமதாஸ் எம்.பி, இந்த விழிப்புணர்வு எழுச்சி பயணத்தை மேற்கொள்கிறார். இதில் அரசியல் நிலைகளை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News