உள்ளூர் செய்திகள்

குழாய் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் 

நெல்லை-பேட்டை சாலையில் குழாய் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-06-28 09:30 GMT   |   Update On 2022-06-28 09:30 GMT
  • பேட்டை கோடீஸ்வரன்நகர் குளத்தாங்கரை பகுதியில் மெயின்ரோட்டில் வளைவு ஒன்று உள்ளது.
  • இந்த வளைவு பகுதியில் ஆற்று தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது.

நெல்லை:

நெல்லையை அடுத்த பேட்டை கோடீஸ்வரன்நகர் குளத்தாங்கரை பகுதியில் மெயின்ரோட்டில் வளைவு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் பள்ளிவாசல், கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த வளைவு பகுதியில் ஆற்று தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வந்தது. தொடர்ந்து மாநகராட்சிக்கு பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு பள்ளம் தோண்டப்பட்டு குழாய் சீரமைக்கப்பட்டது.

ஆனால் குழாயை சீரமைத்த பின்னர் பள்ளத்தை மூடாமல் அப்படியே போட்டு விட்டனர். சுமார் ஒரு வாரமாக பள்ளம் மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் சிரமம் அடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள வளைவான சாலையால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது பள்ளமும் மூடப்படாமல் இருப்பதால் பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக பள்ளத்தை மண் கொண்டு நிரப்பி தற்காலிகமாக அதன்மீது சாலை அமைத்து போக்குவரத்து சீராக அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனரிடம் நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அயூப் மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News