மாரண்டஅள்ளி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி
- சிறிது நேர தேடலுக்கு பிறகு கிணற்றின் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் கிடப்பதை பார்த்து சங்கர் அக்கா கூச்சலிட்டுள்ளார்.
- ஆனால் சிறுவன் தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்துள்ள, கடத்திகொள்மேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது35). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி (28), இவர்களுக்கு, தர்ஷன் (3), தரணிஷ் (1) என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சங்கர் தனது அருகில் உள்ள அக்காவின் விவசாய நிலத்திற்கு அடிக்கடி தன் குழந்தைகளுடன் சென்று வருவது வழக்கம். நேற்று சங்கர் தர்ஷனை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது விவசாய நிலத்தில் சிறுவன் விளையாடுவது வழக்கமாக இருந்துள்ளது. நேற்று மாலை, திடீரென்று மகனை காணாமல் அக்கம் பக்கம் தேடி உள்ளார்.
இதனையடுத்து, சிறிது நேர தேடலுக்கு பிறகு கிணற்றின் அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்குள் சிறுவன் கிடப்பதை பார்த்து சங்கர் அக்கா கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து சிறுவனை தூக்கி கொண்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அந்த சிறுவன் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.