உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு புகையிலை விற்றவர் கைது
- பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை சிலர் விற்பனை செய்வதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆவுடையானூர் அருகே உள்ள சின்னகுமார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரது மகன் ஆனந்த செல்வம் (வயது 24) என்பவர் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 13 மூட்டை புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்த செல்வத்தை கைது செய்தனர்.