- மதுரையில் பெண்களிடம் நகை திருட்டு போனது.
- மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
மதுரை
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முருகேசன் மனைவி பானுமீனா (வயது 42). இவருக்கு நேற்று இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே பானு மீனா மகளுடன் மோட்டார் சைக்கிளில் மருந்து கடைக்கு வந்தார். அங்கு மருந்து வாங்கிக் கொண்டு தாயும், மகளும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் சவுராஷ்டிரா டீச்சர்ஸ் காலனி மெயின் ரோட்டில் சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்த 2 மர்ம நபர்கள் பானுமீனாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக பானு மீனா குற்றபிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கலை நகரை சேர்ந்த ஆத்தப்பன் மனைவி தேனம்மை (43). இவர் செக்கடி தெருவில் உள்ள யோகா மையத்துக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், தேனம்மை அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக அவர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.