மாநகராட்சியில் தூய்மை பணிக்கான மக்கள் விழிப்புணர்வு இயக்கம்
- மாநகராட்சியில் தூய்மை பணிக்கான மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது,
- வீடு வீடாக மேயர் சென்றார்
கரூர்:
கரூர் மாநகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் மாதத்தின் 2வது மற்றும் இறுதி சனிக்கிழமைகளில மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள 48 வார்டுகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4 மண்டலங்களில் 25 குழுக்கள் பிரிக்கப்பட்டு மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் ப.சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் எஸ்.பி. கனகராஜ், அன்பரசன் உள்ளிட்ட மண்டலத்தலைவர்கள் மேற்பார்வையில் என் குப்பை என் பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் வீதி, வீதியாக சென்று பொதுமக்கள் குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து தரவேண்டும் என்பதை பள்ளி மாணவர்களுடன் சென்று குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து தரவேண்டும் என்பதை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் வாங்கப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற குழுவில் 50 மாணவர்கள் உடன் வீடு, வீடாக சென்று மாநகராட்சி மேயர் கவிதா துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது பச்சை மற்றும் நீல நிற வண்ணம் கொண்ட குப்பை வாளிகளை கையில் எடுத்து சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள உரம் தயாரிக்கும் கூடத்திற்கு சென்று குப்பைகளை தரம் பிரித்து உரமாக தயாரிக்கும் முறைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று மாணவர்களுக்கு மேயர் கவிதா எடுத்து கூறினார். இதில் சிறப்பாக பணியாற்றிய 50 நபர்கள் குழுவில் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு ரூ.1,500 மதிப்பிலான பரிசினை மேயர் கவிதா வழங்கினார்.