உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் கடை-குடோனில் பதுக்கிய 200 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2022-06-28 06:33 GMT   |   Update On 2022-06-28 06:33 GMT
  • குட்கா பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாலும் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பு
  • குமரி-கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாலும் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாலும் அதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரி-கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப் பொரு ட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருபவர்களை போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல மொத்த விற்பனை கடை மற்றும் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு மூட்டை மூட்டையாக 200 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பணியில் இருந்த மார்த்தாண்டத்தையடுத்த நெல்வேலி ஓச்சவிளையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 49), வீயன்னூர் செவரக்கோட்டை முருக தாஸ் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News