புதுக்கடை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை திருட்டு
- போலீசில் பெண் புகார்
- போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் , ஆவுநின்ற விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெகன். கேரளாவில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ஆஷா(வயது 29). இவர் ஆவுநின்றவிளையில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ஆஷா வீட்டை பூட்டி விட்டு தனது குழந்தைகளுடன் மார்த்தாண்டம் அருகே விரிகோட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் அவரது வீடு திறந்து கிடப்பதாக கணவரின் தம்பி ஜெயசிங் போன் மூலம் ஆஷாவுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஊருக்கு புறப்பட்டார்.அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்ததோடு, பீரோவையும் உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.அப்போது பீரோவில் இருந்த 2 1\2 பவுன் நகைகள் திருட்டு போய் இருப்பதாக ஆஷா தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருட்டு போன நகைகள் மதிப்பு ரூ.75 ஆயிரம் என கூறப்படுகிறது. பூட்டிய வீட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.