உள்ளூர் செய்திகள்

தி.மு.க. ஆட்சியில்தான் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு

Published On 2022-08-10 07:39 GMT   |   Update On 2022-08-10 07:39 GMT
  • பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கலையரங்கில் காணி இன மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • மலைகள், காடுகளில் பிறந்து ஆற்றுப் படுகைகளில் வளர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாவட்ட வனத்துறையின் சார்பில் உலக பழங்குடியினர் தினத்தையொட்டி பேச்சிப்பாறை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கலையரங்கில் காணி இன மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் வரவேற்றார். பழங்குடி யினர் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுரேஷ் சுவாமியார் காணி, காணிக்காரர் வரலாற்று விளக்கவுரையாற்றினார். மாவட்ட வன அலுவலர் இளையராஜா விழா விளக்க உரையாற்றினார். கடையல் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

உலகம் முழுவதும் ஆகஸ்டு 9-ந்தேதி உலக பழங்குடியினர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கும், அவர்களது முன்னேற்றத்திற்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 48 காணி பழங்குடி யின மலைவாழ் மக்கள் காட்டு விலங்குகளோடு கூட்டு சேர்ந்து தங்களுடைய வாழ்க்கையினை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டின் மூத்த குடிமக்கள் காணி இன மக்கள். சங்க இலக்கியங்களில் காணி மலைவாழ் மக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மக்கள் அனைவரையும் உபசரிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள். மலைகள், காடுகளில் பிறந்து ஆற்றுப் படுகைகளில் வளர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறையில் இருந்துதான் 1989-வது வருடம் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக என்னு டைய போராட்டத்தை முன்னெடுத்தேன் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தரப்பட்ட மக்களையும் ஒன்றிணைத்து செயல்படக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி புரிந்து வருகிறார். சாதி என்ற விலங்கை அறுத்து எறிந்திட நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கடினமான பேச்சாக இருந்தாலும் வெறுப்பாக பேசக்கூடாது. வெறுப்பு அரசியல் செய்வது நாகரீகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் எதிரான தாக அமைந்திவிடக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நாம் அனை வரும் வனத்தினையும், இயற்கையினையும், நமது நாட்டினையும் பாதுகாத்திட இத்தருணத்தில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, வன பாதுகாவலர் சிவகுமார், பயிற்சி உதவி வன பாதுகாவலர் மனாசிர் ஹலிமா, திருவட்டார் தாசில்தார் சதீஷ் சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோலப்பன், தோட்டக் கலைத்துறை அலுவர் ஷீலா ஜாண், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், தி.மு.க. திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜாண்சன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பெர்ஜின், ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News