தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்திய மூதாட்டியின் போராட்டம்
- மூதாட்டி லட்சுமி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- சரிவர வாகனம் ஓடாததால் கோவிந்தராஜ் அதே பகுதியில் உள்ள நபர்களுக்கு வாகனத்தை கொடுத்துள்ளார்.
தருமபுரி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் செக்குமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி. மூதாட்டியான இவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளான நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்த பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மூதாட்டி லட்சுமியின் கணவர் அன்பு, மகன் கோவிந்தராஜ், மீது பைனான்ஸில் கடன் பெற்று டாரஸ் லாரி வாங்கி கொடுத்துள்ளார். சரிவர வாகனம் ஓடாததால் கோவிந்தராஜ் அதே பகுதியில் உள்ள நபர்களுக்கு வாகனத்தை கொடுத்துள்ளார்.
வாகனத்தை வாங்கியவர்கள் பைனான்ஸ் தொகையை நாங்களே செலுத்திக் கொள்கிறோம் என கூறி வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் பைனான்சில் இரண்டு தவணை மட்டும் கட்டி விட்டு மீதி கட்டாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
பைனான்சியர் லட்சுமியின் கணவர் அன்பு, மற்றும் மகன் கோவிந்தராஜை வற்புறுத்தியதால் மன உளைச்சலில் அன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் பைனான்சில் இருந்து லட்சுமி மகன் கோவிந்தராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சலுக்கு ஆளான கோவிந்தராஜ் பென்னாகரம் காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் என பலமுறை மனு கொடுத்தார். ஆனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லை என மூதாட்டி லட்சுமி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.