வளரும் எழுத்தாளர்கள் திறமைகளை கொண்டு புத்தகங்களை எழுத வேண்டும்- தருமபுரி புத்தக திருவிழாவில் அறிவுரை
- தருமபுரி மாவட்ட படைப்பாளர்களின் 12 நூல்கள் வெளியிடப்பட்டன.
- மாவட்டத்தில் பலரும் புத்தகங்கள் எழுதுகிறார்கள்.
தருமபுரி,
தருமபுரியில் நடைபெற்று வரும் நான்காவது புத்தகத்திருவிழாவில் தருமபுரி மாவட்ட படைப்பாளர்களின் 12 நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஆசிரியர் இளங்கோ தலைமை வகித்தார்.
புத்தகங்களை வெளியிட்டுப் பேசிய தகடூர் புத்தகப் பேரவை செயலாளரும் முன்னாள் எம்.பி. மருத்துவர் செந்தில் பேசும் போது, தருமபுரி மாவட்டத்தில் பலரும் புத்தகங்கள் எழுதுகிறார்கள். எழுதப்படும் புத்தகங்கள் தரமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப நூலாசிரியர்கள் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் சிசுபாலன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடத்தூர் ஐயப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரி தாளாளர் சதாசிவம், மருத்துவர் கிருபாகரன் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில் நூலகர் சரவணன் எழுதிய கத்தரிக்காய் சாம்பார், மலர்மன்னன் எழுதிய பா எழுதப் பழகுவோம், கவிமுகில் சுரேஷ் எழுதிய நீலகிரியார், குமார் எழுதிய இருக்கட்டும் இலக்கு விடியட்டும் கிழக்கு, இளந்தென்றல் சரவணன் எழுதிய இருளுக்குள் ஒளிரும் விடியல், மாலதி அனந்த பத்மநாபனின் ஆதி முதல் அந்தம் வரை, செவ்வந்தி துரையின் கைபிடித்த கண்ணாளா, கை சேராயோ கனவே, காதலெனும் நெடும் வானத்தில், சுஸ்ருதா சுந்தரியின் மூன்றடி திருக்குறள், பிருந்தா சாராவின் கொலைகாரன் நிலவு, சண்முகப்பிரியாவின் பிரியாவின் கவிதைகள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. முன்னதாக மாவட்ட படைப்பாளர் சங்கத் தலைவர் நூலகர் சரவணன் வரவேற்புரை வழங்கினார்.
முடிவில்அறிவுடைநம்பி நன்றி கூறினார். ஆசிரியர் பழனி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.