ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
- தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், ரேசன் கடையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
தேனி:
பெரியகுளம் அருகே வடபுதுப்பட்டி மற்றும் தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ரேசன் கடைகளில் இம்மாதத்திற்கான பொருட்கள் முதல் தவணை வரப்பெற்ற விபரம் மற்றும் விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தகவல் பலகையில் பொருட்களின் இருப்புகளை முறையாக தினந்தோறும் பதிவு செய்திடவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப் பொருட்களை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் வழங்கிட விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, அருகில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு கலெக்டர் நேரடியாக சென்று இம்மாதம் வழங்கப்பட்ட அரிசி மற்றும் குடிமைப் பொருட்களின் தரம், ரேசன் கடையின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.