அரசு ஆரம்ப பள்ளி, மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
- மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப பள்ளி, மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
- மாணவர் விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவேடுகள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள், மதிய உணவின் தரம் குறித்து கலெக்டர் முரளிதரன்ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மற்றும் சுற்றுப்புற சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை முறையாக தினந்தோறும் கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மேலச்சொக்கநாதபுரம் பேரூரட்சிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதியில் பணியாளர்கள் எண்ணிக்கை, வருகை பதிவேடு, மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய தங்கும் அறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை, உணவுகளின் வகைகள், தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள விடுதி காப்பாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளின் எண்ணிக்கை, எடை அளவிடும் கருவி, அங்குள்ள விளையாட்டு பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் அதன் தரம் ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ரேசன்கடையில் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தார்.