பழனியில் இன்று அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறித்த கொள்ளையர்
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகையை பறித்துச்சென்றனர்.
- பைக் கொள்ளையர் அட்டகாசம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது.
பழனி:
பழனி அருகில் உள்ள திருநகரைச் சேர்ந்த மாரி மனைவி ஆவுடையம்மாள் (77). இவர் இன்று காலை தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பைக்கை நிறுத்திவிட்டு அவரிடம் பேச்சுக் கொடுப்பது போல அருகில் வந்தனர்.
பின்னர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். உடனடியாக அவர் கூச்சலிட்ட போதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் கொள்ளை யர்கள் தப்பினர்.
இதனை தொடர்ந்து பழனி கவுண்டன் குளத்தை சேர்ந்த மனோகரன் மனைவி மஞ்சுளா (70) என்பவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
அதில் அரை பவுன் தங்க தாலி இருந்துள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த 2 வழிப்பறிகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பழனியில் கடந்த சில நாட்களாக பைக் கொள்ளையர் அட்டகாசம் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை பீதியடைய வைத்துள்ளது.