அம்பத்தூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து- இளம்பெண் பலி
- தனியார் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த கார் திடீரென ஏஞ்சலின் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது.
- மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஏஞ்சலின் ஹெல்மெட்டை சரியாக அணியாமல் இருந்ததாக தெரிகிறது.
அம்பத்தூர்:
திருமங்கலத்தை சேர்ந்தவர் ஏஞ்சலின் (வயது26). செங்குன்றத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இன்று காலை 7.50 மணிக்கு அவர் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, வாவின் சாலையில் உள்ள ஐ.டி. கம்பெனி அருகே சென்று கொண்டு இருந்தபோது திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் வந்த கார் திடீரென ஏஞ்சலின் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஏஞ்சலின் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மோட்டார் சைக்கிளில் வந்தபோது ஏஞ்சலின் ஹெல்மெட்டை சரியாக அணியாமல் இருந்ததாக தெரிகிறது. கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டபோது ஹெல்மெட் தனியாக கழன்று பறந்து உள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான அம்பத்தூர் மேனாம்பேட்டை சேர்ந்த சரத்குமார் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தாங்கள் வந்த வாகனம் மோதி இளம்பெண் பலியானது கூட தெரியாமல் மாணவ-மாணவிகள் காரிலேயே அமர்ந்து இருந்தனர். அவர்களை அவ்வழியே சென்ற பொதுமக்கள் இறக்கி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.