உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து பண்டிகள் வருவதால் சேலத்தில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பு

Published On 2022-08-18 10:53 GMT   |   Update On 2022-08-18 10:53 GMT
  • சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது.
  • 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

சேலம்:

சேலத்தில் கரும்புச் சாறினால் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு பொது மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சேலத்தில் தான் கரும்பு சாகுபடி அதிகளவில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் காமலாபுரம், ஓமலூர், நாலுகால்பாலம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர், தும்பல், டேனிஸ்பேட்டை, தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 130–-க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தில் அதிக ஆலைகள் உள்ளன.

இந்த ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தின் பல இடங்களுக்கும் தவிர இந்தியாவில் பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆடி மாதத்தையொட்டி வெல்லம்அதிகளவில் தேவைப்பட்டதால் கடந்த 6 மாதங்களில் ஜூன், ஜூலை வழக்கத்தைவிட வெல்லம் உற்பத்தியை அதிகப்படுத்தினர்.

உற்பத்தி செய்யப்பட்ட வெல்லம் அவ்வப் போது விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆடிப்பண்டிகையை தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியும், செப்டம்பர் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கி, அக்டோபர் 4-ந் தேதி ஆயுதபூஜை விழாவும் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வெல்லம் ஆலைகளில் வெல்லம் உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கருப்பூர்,ஓமலூர், தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தினசரி 50 முதல் 60 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகேயுள்ள வெல்ல மண்டிக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு ஏலம் எடுக்க சேலம் மற்றும் தமிழகத்தில் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருகை தருகின்றனர்.தொடர்ந்து அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் ஆலைகளில் வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை உற்பத்தியை வேகப்படுத்தி யுள்ளோம்.

தற்போது நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 டன் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. மண்டியில் 30 டன் வெல்லம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் வெல்லம் 60 சதவீதம் பெங்களூருக்கும், மீதமுள்ள 40 சதவீதம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் (1250 முதல்1350 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு உற்பத்தியாளர்கள் கூறினர்.

Tags:    

Similar News