உள்ளூர் செய்திகள்

தீயில் முற்றிலும் எரிந்து கிடக்கும் குடிசை வீடு.

பழனி அருகே வயதான தம்பதியின் குடிசைக்கு தீ வைப்பு

Published On 2022-09-27 05:42 GMT   |   Update On 2022-09-27 05:42 GMT
  • முன்விரோதம் காரணமாக மின் இணைப்பை துண்டித்து குடிசைக்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
  • வயதான தம்பதியின் குடிசைக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி:

பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் செல்லமுத்து (வயது 80) என்பவர் காவலாளியாக 50 ஆண்டுகளுக்கும் மேல் வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்காக முருகன் தோப்புக்கு அருகிலேயே ஒரு குடிசை போட்டு கொடுத்தார். அதில் செல்லமுத்து மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முருகன் இறந்து விடவே அவரது மனைவி செல்லமுத்துவை குடிசையில் இருந்து வெளியேறுமாறு கூறி வந்துள்ளார்.

ஆனால் செல்லமுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் செல்ல முத்து வழக்கு தொடர்ந்தார்.

நேற்று இரவு வீட்டில் இருந்த செல்லமுத்துவின் மனைவியை வெளியே இழுத்துப்போட்ட முருகன் குடும்பத்தினர் அங்கிருந்த மின் இணைப்பை துண்டித்து குடிசைக்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் குடிசை முற்றிலும் எரிந்து விட்டது.

இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இது குறித்து பழனி தாலுகா போலீசுக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. சிவசக்தி தலைமையிலான போலீசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான தம்பதியின் குடிசைக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News