சூலூர் நொய்யல் ஆற்றில் செத்து மிதந்த 8 ஆடுகள்
- கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
- விஷத்தன்மை உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் :
சூலூர் மின் மயானம் அருகே நொய்யல் ஆற்றில் ஆடுகள் இறந்து மிதப்பதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் இதுகுறித்து இருகூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ரகுநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி ஆடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பகுதியில் சேறும் சகதியும் ஆக இருந்ததால் ஆடுகளை நெருங்க முடியவில்லை. இதனை அடுத்து சூலூர் பெரிய குளத்தில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பரிசல் கொண்டு வந்து அதன் மூலம் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கினர். சுமார் 2 மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பிறகு தண்ணீரில் செத்து மிதந்த 8 ஆடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆடுகள் மேய்ச்சலின் போது கூட்டத்தில் இருந்து ஆடுகள் தவறி விழுந்ததா? அல்லது நொய்யல் ஆற்றில் உள்ள தண்ணீரை குடித்து ஆடுகள் இறந்ததா, தண்ணீரில் விஷத்தன்மை உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆடுகளை உடல் கூராய்வு பரிசோதனை செய்யாமல் வருவாய்த் துறையினர் புதைத்தது பெரும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.