உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய காட்சி.

உடல் நலத்துடன் இருப்பவரை பார்த்து பொறாமைப்படும் நிலை வந்துள்ளது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

Published On 2022-05-23 09:29 GMT   |   Update On 2022-05-23 09:29 GMT
உடல் நலத்துடன் இருப்பவரை பார்த்து பொறாமைப்படும் நிலை வந்துள்ளது என தூத்துக்குடியில் நடைபெற்ற உப்பு உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
தூத்துக்குடி:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி உப்பு உற்பத்தியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சமூக நலத்துறை அமைச்சர்  கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாவட்ட கலெக்டர்  செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் தூத்துக்குடி உட்பட 6 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த உப்பு உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:-

உலக அளவில் 700 கோடி மக்கள் தொகையில் 200 கோடி பேருக்கு அயோடின் சத்து குறைபாடு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. இந்தியாவில் 10 சதவீத மக்களுக்கு அயோடின் சத்து குறைபாடு இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் பல கோடி சொத்து இருந்தால் அவரைப் பார்த்து மனிதர்கள் பொறாமைப்பட்ட நிலை இருந்தது. தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மனிதன் ஆரோக்கியமாக உடல் நலத்துடன் இருந்தால் அவரைப் பார்த்து மக்கள் பொறாமைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தி உணவு பாதுகாப்பு விஷயத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. 

டீத்தூள் தண்ணீரில் வைத்தால் உடனே அதன்நிறம் மாறினால் அது கலப்பட டீத்தூள்  நல்ல டீ தூள் கிடையாது. கொதிக்க வைத்த பிறகு தான் அதன் நிறம் மாறவேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பட்டி உற்பத்தியும் இருக்கிறது. அதிலும் கலப்படம் இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்தும் ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

உப்பு உற்பத்தியாளர் வைத்த கோரிக்கைகள் நிறைகுறைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் நல்ல முறையில் ஒரு தீர்வு ஏற்படுத்தி சரி செய்யப்படும் என்று பேசினர்.
Tags:    

Similar News