திருமங்கலத்தில் பஸ்சில் வந்த வியாபாரியிடம் ரூ.5 லட்சம் அபேஸ்
திருமங்கலம்:
மதுரை திருநகரை சேர்ந்தவர் சரவண கார்த்திக் (37). ஆட்டு பண்ணை வைத்துள்ளார். ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்கி வளர்த்து விற்பனை செய்வது வழக்கம்.
நேற்று இவர் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடு வாங்குவதற்காக ரூ. 5 லட்சத்தை டிராவல் பேக்கில் வைத்துக் கொண்டு திருமங்கலத்தில் இருந்து கோவில்பட்டிக்கு சென்றார்.
சந்தையில் ஆடுகள் சரிஇல்லாததால் மீண்டும் பணத்தை கொண்டு வந்துள்ளார். கோவில்பட்டியில் இருந்து திருமங்கலம் வந்த அவர், திருமங்கலத்தில் இருந்து திருநகர் செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார்.
அப்போது அவர் கொண்டு வந்த பையில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் பிளேடு மூலம் கிழித்து திருடிச் சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த வியாபாரி சரவண கார்த்திக் இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.