உள்ளூர் செய்திகள்
.

பென்னாகரம் கோழி வியாபாரி கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் பெங்களூருவில் சிக்கினார்

Published On 2022-05-22 09:56 GMT   |   Update On 2022-05-22 09:56 GMT
பென்னாகரம் கோழி வியாபாரி கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வாலிபர் பெங்களூருவில் சிக்கினார்.
பென்னாகரம், 

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கோணங்கிஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கூசங்கொட்டாய் அதியமான் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கோழி வியாபாரி இவருக்கும் உறவினராக சுப்பிரமணி (50) அவருடைய மகன்கள் மாதேஷ் (25), சுரேஷ் (22) மற்றும் மனைவி சின்னபாப்பா ஆகியோருக்கும் இடையே அடிக்கடி நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் கோழி வியாபாரி செல்வத்தை 4 பேரும் சேர்ந்து கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் அரிவாளால் தாக்கி கொலை செய்தனர்.

இதுகுறித்து கோழி வியாபாரியின் மனைவி ஜானகி, பென்னாகரம்  போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்து, தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மாதேஷ், சுரேஷ், சின்னபாப்பா ஆகிய மூவருக்கும் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நால்வருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இதனை அறிந்த மாதேஷ் மற்றும் சுரேஷ் தலைமறைவாகி விட்டனர்.

இந்த நிலையில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை வழக்கில் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருவது தெரியவந்தது.

இந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் மாதேஷ் என்பவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சுரேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News