உள்ளூர் செய்திகள்
அக்னி கழு நிறைவு பழனி கிரிவலப்பாதையில் மாட்டுவண்டி ஊர்வலம்
முத்துக்குமாரசாமி, பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து அடிவாரம் திருவீதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி:
பழனியில் சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்களும் சேர்ந்து 14 நாட்களில் அக்னிநட்சத்திர விழா நடைபெறும். இந்த நாட்களில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் வெளியூர் பக்தர்கள் கிரிவலப்பாதையை சுற்றி வந்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.
அக்னிநட்சத்திர கழு எனப்படும் இத்திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி இன்று காலை முத்துக்குமாரசாமி, பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து அடிவாரம் திருவீதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து வள்ளி-தெய்வாணையுடன் முத்துக்குமாரசாமி இன்று மாலை வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்னதாக கோவை மாவட்டம் தேவனூர் புதூரை சேர்ந்த பக்தர்கள் மாட்டுவண்டி பூட்டி கிரிவலப்பாதையில் ஊர்வலமாக வந்தனர். அதனைதொடர்ந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.