உள்ளூர் செய்திகள்
தக்காளி

ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை

Published On 2022-05-21 06:06 GMT   |   Update On 2022-05-21 06:06 GMT
வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது.

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன.

சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். அதிலும் குறிப்பாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு தொடர்ந்து வரத்து குறைவாக வருவதால் இதன் எதிரொலியாக நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. கடந்த வாரம் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் இருந்து தக்காளி விளைச்சல் குறைந்ததால் தக்காளி வரவில்லை. தற்போது வ.உ.சி மார்க்கெட்டுக்கு ஆந்திராவில் மட்டும் இருந்து தக்காளி வரத்து ஆகி வருகிறது.

15 டன் தக்காளி வரத்து ஆகி இருந்த இடத்தில் தற்போது வெறும் 4 டன் தக்காளி மட்டுமே வரத்தாகி வருகிறது. இதனால் இன்று வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் தக்காளி வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்பனையானது.

இந்நிலையில் மீண்டும் இன்று 100 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. சுமாராக இருக்கும் தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும், நல்ல தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கும் விறக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் ஈரோடு சிந்தாமணி கூட்டுறவு அங்காடியில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ. 72- க்கு விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.90 -க்கு விற்பனையாகி வருகிறது.

Tags:    

Similar News