உள்ளூர் செய்திகள்
நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் அதிகரிப்பு
வாழப்பாடி நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு படிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில், தமிழக அரசு பொது நூலகத்துறை வாயிலாக 1961ல் தொடங்கப்பட்டு 60 ஆண்டு கடந்து வைரவிழாக் கண்ட கிளை நூலகத்தில், பல்வேறு துறை சார்ந்த 35,000 நூல்கள் உள்ளன.
போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் மற்றும் பள்ளி பாடத்திட்ட நூல்களையும் அரசு வழங்கியுள்ளது. இந்த நூலகத்தில் 9,500 க்கும் மேற்பட்ட வாசக உறுப்பினர்களும், 175 புரவலர்களும் உள்ளனர்.
இந்த நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில், 2020ல் கூடுதல் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், பல்வேறு போட்டித் தேர்வுகளை அடுத்தடுத்து அறிவித்து வருவதால், போட்டித் தேர்வில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்களும், இளம்பெண்களும் வாழப்பாடி நூலகத்திற்கு சென்று நூல்களை குறிப்பெடுத்து படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள், புரவலர்கள், தன்னார்வ இயக்கங்களின் ஒத்துழைப்போடு, இந்த நூலகம் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.