உள்ளூர் செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் நர்சிங் மாணவி தற்கொலை

Published On 2022-05-20 04:36 GMT   |   Update On 2022-05-20 04:36 GMT
ஈரோட்டில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி வலசு விவேகானந்தன் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். நெசவு தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகள் சந்தியா (வயது 19). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஒரு வாரமாக கல்லூரி விடுமுறை என்பதால் சந்தியா வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். சந்தியாவும், அவருடைய தங்கை காவியாவும் ஒரு அறையில் படுத்து தூங்கினர். காலையில் காவியா எழுந்து பார்த்தபோது சந்தியா வீட்டில் உள்ள இரும்பு கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சந்தியாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தியா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சந்தியா எதற்காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை. சந்தியா வழக்கம் போல் எல்லோரிடமும் சகஜமாக பேசி இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் தனது தங்கையுடன் மகிழ்ச்சியாக பேசி தூங்க சென்றார்.

திடீரென காலையில் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சந்தியா கடைசியாக யாரிடம் செல்போனில் பேசி உள்ளார் என்ற விவரத்தை போலீசார் எடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News