உள்ளூர் செய்திகள்
40 அடி பள்ளத்தில் விழுந்து தலைக்குப்புற கவிழ்ந்த காரை படத்தில் காணலாம்.

மேட்டுப்பாளையம் அருகே விபத்து- 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒருவர் பலி

Published On 2022-05-19 06:17 GMT   |   Update On 2022-05-19 06:17 GMT
மேட்டுப்பாளையம் அருகே 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:

கேரளா மாநிலம் வயநாடு புல்பள்ளி கனிகுளத்து ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (65).

இவரும் இவரது மகன் யோபேஷ்(35), யோபேஷ் மகள் அம்மு (9) மற்றும் உறவினர்கள் தாமஸ் (68), ஜார்ஜ் (60) ஆகியோர் கடந்த 16-ந்தேதி வயநாட்டில் இருந்து கார் மூலம் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து நேற்று இரவு காரில் இருந்து புறப்பட்டனர்.

ஊட்டி வழியாக ஊர் திரும்ப திட்டமிட்டு அவர்கள் வந்து கொண்டு இருந்தனர். மேட்டுப்பாளையம் அருகே ஊட்டி சாலையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் இன்று காலை 5.30 மணிக்கு அவர்களது கார் சென்றது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென கார் 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணம் செய்த ஜோஸ் (65) சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். மேலும் காரில் பயணம் செய்த யோபேஷ், அனாமிகா, தாமஸ் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News